சலுகை விலையில் தக்காளி விற்பனை: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஊழியர்கள்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளியை அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளியை அரசு ஊழியர்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைவாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் நடமாடும் விற்பனை மையம் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 5 இடங்களில் நடமாடும் விற்பனை மையம் மூலம் நடைபெறும் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் ஒரு கிலோ தக்காளி 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
மேலும் இன்று கூட்டுறவு சங்கள்கள் முலம் 810 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அது மேலும் வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்தார்