காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக் கொலை 5 பேர் கைது

கரூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காதலியின் தந்தை, உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (23). சலூன்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டு அருகே வசிக்கும் கல்லூரி மாணவியை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று பிற்பகலில் கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஹரிகரன் மீனாவுடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மீனா கண்ணெதிரிலேயே ஹரிஹரனை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

காதலி கண்ணெதிரே காதலனை கொலை செய்த சம்பவத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் உறவினர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த கரூர் நகர காவல்நிலைய போலீசார் பெண்ணின் பெரியப்பா சங்கர் மாமா, கார்த்திகேயன் மற்றொரு உறவினர் வெள்ளைச்சாமி ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர்.இந்நிலையில் கொலை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறி உயிரிழந்த ஹரிஹரன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர், திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கை விடப்பட்டது.

Next Story