சென்னை மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து மின்வாரிய செயலாளரும் பணியிட மாற்றம்
சென்னை மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து மின்வாரிய துறை செயலாளரும் திடீர் என பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
எரிசக்தித்துறை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த பணியிட மாறுதலுக்கான உத்தரவினை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் தான் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி திடீர் என பணியிட மாற்றம் செய்யப்பட்டு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறைக்கு நியமிக்கப்பட்டார். எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக இருந்த அருணா சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
சென்னைக்கு கடந்த 10ம் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை தந்த போது சென்னை விமான நிலையத்தில் திடீர் என ஏற்பட்ட மின் தடை காரணமாக அவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் மின்வாரிய துறை செயலாளரும் திடீர் என மாற்றம் செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu