கோடை மழையால் திணறும் சென்னை: மழை நீர் சூழ்ந்ததால் 7 ரயில் சேவை மாற்றம்
ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்து நின்ற ரயில் பயணிகள்.
சென்னையில் கனமழை காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரெயில்கள் மாற்றி விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையினால் நகரின் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.
மேலும் முக்கிய சாலைகளில் எல்லாம் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் தடுமாறின. நுங்கம்பாக்கம் உள்பட பல இடங்களில் மழை நீர் வடிகால் இல்லாத காரணத்தினால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சென்னையில் பெய்த மழைக்கு ரயில் தண்டவாளங்களும் தப்பவில்லை. சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளம் மழை நீரால் சூழப்பட்டது. இதன் காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரெயில்கள் மாற்றி விடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் திருவள்ளூர், ஆவடி, கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரெயில், லால்பாக் விரைவு ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் கோடை காலத்தில் அதாவது ஜூன் மாதத்தில் கடுமையான மழை பெய்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னை நகரில் அதிக பட்சமாக 15 செ.மீ. வரை மழை அளவு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu