அரியலூர் மாவட்ட வங்கி கடன் முகாமை துவக்கி வைத்த கலெக்டர்
அரியலூர் மாவட்ட வங்கிகளில் கடன் வழங்கும் முகாமை கலெக்டர் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரம், தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் அனைத்து வங்கிகளின் மாபெரும் கடன் வழங்கும் முகாமை கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் (சென்னை வட்டாரம்) ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கிய கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது:
கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தபோது வங்கிகள் மட்டுமே பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்கியது. மேலும், பொதுமக்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் வங்கிகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
எனவே, வங்கிகளில் கடனுதவிகளை பெறும் பொதுமக்கள் அனைவரும் தங்களது கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்தும் பட்சத்தில், உங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதுடன் உங்களின் வளர்ச்சிலும் வங்கிகள் முக்கிய பங்கு வகுக்கும். பொதுமக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வங்கிகள் அனைத்தும் தங்கள் மூலமாக செயல்படுத்தும் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்தி, கடனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் தாட்கோ, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறையின் வாயிலாக 412 நபர்களுக்கு ரூ.6.26 கோடி மதிப்பீட்டிலும், 71 நபர்களுக்கு ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்த வங்கி கடன்கள் பாரத ஸ்டேட் வங்கி மூலமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சிவக்குமார், தாட்கோ மேலாளர் மதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோனல்பெர்னிடிக், நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.