வடகிழக்கு பருவமழையின் காரணமாக 987 வீடுகள் சேதம்
அரியலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 987 வீடுகள் சேதமடைந்துள்ளது. 645பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 987 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 655 குடிசை வீடுகள் பகுதியாகவும், 20 குடிசை வீடுகள் முழுமையாகவும், 300 ஓடு மற்றும் இதர வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.
இதில் பகுதி சேதமடைந்த குடிசை வீட்டிற்கு ரூ.4100 நிவாரணமாக இதுவரை 435 பயனாளிகளுக்கு ரூ.17 இலட்சத்து 83 ஆயிரத்து 500-ம், முழுமையாக சேதமடைந்த குடிசை வீட்டிற்கு ரூ.5000 நிவாரணமாக இதுவரை 14 பயனாளிகளுக்கு ரூ.70 ஆயிரமும், பகுதியாக சேதமடைந்த ஓடு மற்றும் இதர வீடுகளுக்கு ரூ.5200 நிவாரணமாக இதுவரை 184 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 56 ஆயிரத்து 800-ம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக உயிரிழந்த 9 கால்நடைகளுக்கு ரூ.80 ஆயிரமும், மேலும் மனித உயிரிழப்பீடு தொகையாக உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தாருக்கு ரூ.12 இலட்சம் நிவாரணமாகவும் என மொத்தம் 645 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சத்து 90 ஆயிரத்து 300 நிவாரணமாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 342 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.