அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? திருச்சியில் திருமாவளவன் பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? திருச்சியில் திருமாவளவன் பரபரப்பு பேட்டி
X

திருமாவளவன் எம்.பி.

அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? என்று கேட்டதற்கு திருச்சியில் திருமாவளவன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இன்று நடைபெற்ற கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. திருச்சி வந்தார்.திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 23-ந்தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ.க. அரசு எதிர்ப்பு கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பதற்கும் எதிர்க்கட்சிகள் சிதறி போகாமல் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் விதமாக பாஜகவின் மோடி அரசு தொடர்ந்து பல்வேறு சதி திட்டங்களை வகுக்கிறது.

அதன் விளைவாகத்தான் அமலாக்கதுறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை கைது செய்துள்ளனர். எனவே இப்படிப்பட்ட எல்லா அடக்கு முறைகளையும் தாண்டி தமிழக முதல்வர் தற்போது இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் செயல்படுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். மணிப்பூரில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் கும்பல்களால் பழங்குடியின மக்களுக்கு இடையே இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி இன்று பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சங்பரிவார் கும்பல்கள் மணிப்பூரில் காலடி வைத்ததில் இருந்து மணிப்பூர் பற்றி எரிகிறது. இவை அனைத்தையும் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த போக்கை விடுதலை கட்சி சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரை ஆந்திர மாநில காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அவருடைய குடும்பத்தாரையும் சேர்த்து கைது செய்து பல சித்ரவதைகளை தந்து கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளனர். தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கான நீதியை வழங்கிட முன்வர வேண்டும். மேலும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட சித்தூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து வருகின்ற 26-ந்தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் விடுதலை சிறுத்தை கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

எஸ்.வி.சேகர் பிராமணர்களுக்கு என்று ஒரு தனியான கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. விலகினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்குமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், முதலில் இதற்கு பா.ஜ.க. விளக்கம் அளித்த பிறகு பார்ப்போம் என்றார்.

Tags

Next Story