திருப்பதி மலைப்பாதையில் தொடர் விபத்து: யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து வாகனங்கள் திருமலை ஏறுவதற்கு என்று தனிப்பாதையும், இறங்குவதற்கு தனி பாதையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக திருப்பதி மலை பாதையில் தினமும் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. நல்ல வேலையாக இறைவனின் கருணையுடன் இந்த விபத்துகளில் இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி மலையில் விபத்துக்கள் தினமும் நடைபெறுவது கடந்த ஒரு மாத காலமாக தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் திருப்பதி மலைக்கு ஒரு பக்தர்கள் காயமடைவதுடன் தங்களுடைய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் சேதமடைவதால் மனவேதனையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க தேவஸ்தான நிர்வாகமும் போலீசாரும் பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். விபத்துக்களை தடுப்பதற்காக ஆன்லைன் கண்காணிப்பு அடிப்படையிலான வேக கட்டுப்பாடு, வாகன ஓட்டிகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து அனுப்பி வைப்பது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை தேவஸ்தான நிர்வாகமும் போலீசாரும் எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் விபத்துக்கள் தொடர் கதையாகிவிட்டன. நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. எனவே இதுபோன்ற முயற்சிகள் தேவையான பலனை அளிக்காது என்று கருதிய தேவஸ்தானம் வருகிற 15ஆம் தேதி திருப்பதி மலைப் பாதையில் மகா சாந்தியாகம் நடத்த முடிவு செய்துள்ளது
இதற்கு முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் திருப்பதி மலை பாதையில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டபோது நடத்தப்பட்ட மகா சாந்தியாகத்திற்கு பின் விபத்துக்கள் நடைபெறுவது வெகுவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மனித முயற்சி, விஞ்ஞானம் ஆகியவற்றால் விபத்துக்களை கட்டுப்படுத்த முயன்ற தேவஸ்தான நிர்வாகம் அதில் கிடைத்த தோல்வியின் காரணமாக விபத்துக்களை கட்டுப்படுத்த மெய்ஞானத்தை நாடி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu