பங்காரு அடிகளார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
பங்காரு அடிகளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்கிற ஆன்மீக ஸ்தலம் உள்ளது. இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டு தலமாகும். இந்தியாவில் மட்டும் இன்றி 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் இந்த பீடத்திற்கு வந்து வழிபடும் பக்தர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார் ஆவார். 82 வயதான பங்காரு அடிகளார் இன்று (அக்டோபர் 19)மாலை உடல் நல குறைவினால் மரணம் அடைந்தார். அவரது உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் ஒரு ஆன்மீக புரட்சியாளர் ஆவார் .இந்த ஆலயத்தில் மட்டும் தான் பெண்கள் எல்லா நாட்களிலும் கோவிலின் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்பது வேறு எந்த ஒரு இந்து கோவில்களிலும் இல்லாத ஒரு சிறப்பம்சமாகும். அந்த வகையில் இவர் ஒரு ஆன்மீக புரட்சி வாதியாக கருதப்பட்டு வருகிறார்.
பங்காரு அடிகளார் மரணம் அடைந்த செய்தி கேட்டதும் செவ்வாடை அணிந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பெண்கள் அம்மா அம்மா என கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பங்காரு அடிகளார் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அரசு சார்பில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்காரு அடிகளார் ஆன்மீக புரட்சியாளர் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நாளை காலை 8 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பங்காரு அடிகளார் உடலுக்கு மலர்வளையம் வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் மஸ்தான் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை மேல் மருவத்தூர் பகுதியில் அரசு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவை பாராட்டி அவருக்கு மத்திய அரசு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து உள்ளது. ஆதிபராசக்தி பீடம் சார்பில் மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்காரு அடிகளார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu