வெள்ளப்பாதிப்பு குறித்து தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளப்பாதிப்பு குறித்து தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி.

வெள்ளப்பாதிப்பு குறித்து தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முன்தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிலையில் 4 மாவட்ட அ.தி.மு.க செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.ஏற்கனவே மூன்று தினங்களுக்கு முன்பு வேளச்சேரி விருகம்பாக்கம் மேற்கு மாம்பலம் தி. நகர் ஆகிய பகுதிகளில், வெள்ள பாதிப்பை எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.அதேபோல மீண்டும் நாளை சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு அவர் நாளை செல்ல திட்டமிட்டுள்ளார், அதற்கு முன் இன்று ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு சொல்லியும் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டதாலேயே சென்னயைில் வெள்ள பாதிப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பால் உணவு போன்றவை மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. மழை ஓய்ந்து ஐந்து நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத சூழ்நிலை இப்போது வரை இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு துரித பணிகள் மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்தது. மேலும் எல்லா இடங்களிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய தலைமைச் செயலாளர் மழை பெய்த பின்னர் என்.எல்.சி.யிலிருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை கேட்டுள்ளதாக சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர்களின் செயல்பாடு என்ன என்று.

மழை வெள்ள பாதிப்புகளுக்கு வடிகால் பணிகள் அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே தொடங்கி இருந்தது. அதன் பின்னர் இவர்கள் வந்து அதை தொடர்ந்தனர். 98 சதவீத பணிகள் முடிந்ததாக ஏற்கனவே கூறிவிட்டு தற்போது 51% மட்டுமே பணிகள் முடிந்திருப்பதாக கூறுகிறார்கள். 20 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்று சொன்னார்கள் உண்மை தான். ஆனால் குளம் போல் நீர் தேங்கி இருக்கிறது.

வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே எச்சரித்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story