தமிழகத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு

தமிழகத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு
தமிழகத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 23.6 கிமீ ஆக உள்ளது. இந்த வேகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தொடர்ந்து இதே வேகம் நீடிக்கும்.

அதேபோல் அதிவேக பயணிகள் ரயில்கள் 50 கிமீ வேகத்தில் இருந்து 52 கிமீ வேகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண ரயில்கள் 32 கிமீ வேகத்தில் இருந்து 35 கிமீ வேகத்திற்கு மாறி உள்ளது.

நாடு முழுக்க உயர்த்த திட்டம்: நாடு முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களின் பிரிவு வேகத்தை மணிக்கு 130 கிமீ ஆக உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தெற்கு ரயில்வேயில், சென்னை எழும்பூர்-மதுரை மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல்-கோழிக்கோடு ஆகியவை மார்ச் 2024க்குள் வேகத்தை மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் அடங்கும்.திருச்சி மதுரை: பயண நேரத்தைக் குறைப்பதற்கும், செயல்திறனை அதிகரிப்பதற்கும், அகலப் பாதைகளில் குறைந்தபட்சம் 130 கி.மீ. வேகத்திற்கு ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

முக்கியமாக சென்னை,திருச்சி, மதுரை, சேலம் உள்பட ஆறு கோட்டங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ஜோலார்பேட்டை ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதனால் மக்கள் பயணம் செய்யும் நேரம் குறையும். பெரும்பாலான தங்க நாற்கர வழிகளில் வேகம் ஏற்கனவே 130 கிமீ வேகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை தற்போது பல்வேறு மண்டலங்களில் 53 வழித்தடங்களை தேர்வு செய்து, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 130 கிமீ வேகத்தை எட்டுவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வேயில், பின்வரும் வழித்தடங்களில் வேகம் மணிக்கு 130 கிமீ ஆக அதிகரிக்கப்படும் -- அரக்கோணம்-மைசூர் (436 கிமீ), திருவனந்தபுரம் சென்ட்ரல்-கோழிக்கோடு (400 கிமீ), சென்னை எழும்பூர்-மதுரை (496 கிமீ), ஜோலார்பேட்டை-பெங்களூரு. (148 கிமீ), பெங்களூரு-மைசூரு (138 கிமீ), கண்ணூர்-கோழிக்கோடு (89 கிமீ), திருவனந்தபுரம்-மதுரை (301 கிமீ) மற்றும் ஜோலார்பேட்டை-கோவை (289 கிமீ).

வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை முதல் பெங்களூரு வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது. இது போக மாநிலத்திற்கு உள்ளே மேலும் ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது.

Tags

Next Story