பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின் விளக்கத்தை படியுங்கள்...

பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின் விளக்கத்தை படியுங்கள்...

பெருஞ்சீரகம். (மாதிரி படம்).

பெருஞ்சீரகத்தில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி என உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தில் பல்வேறு சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு பெருஞ்சீரகம் சரியான மருந்து என்றே கூறலாம். அப்படிப்பட்டி பெருஞ்சீரகத்தில் உள்ள கலப்படம் மற்றும் அவற்றை கண்டறிவது எப்படி? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.


நூறு கிராம் பெருஞ்சீரகத்தில் 345 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 14 கி, அதில் மோனோ-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 10 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 1.5 கி என்ற அளவில் உள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் 52 கி, அதில், நார்ச்சத்து 40 கி, புரதம் 16 கிராம் என்ற அளவிலும் உள்ளது.

நூறு கிராம் பெருஞ்சீரகத்தில் கால்சியம் 1196 மிகி (தினசரி தேவையில் 120%), இரும்புச்சத்து 18.5 மிகி (தினசரி தேவையில் 142%), மெக்னீசியம் 385 மிகி (தினசரி தேவையில் 108%), மாங்கனீஸ் 6.5 மிகி (தினசரி தேவையில் 310%), பாஸ்பரஸ் 487 மிகி (தினசரி தேவையில் 70%), பொட்டாசியம் 1694 மிகி (தினசரி தேவையில் 36%), ஸிங்க் 4 மிகி (தினசரி தேவையில் 42%) என்ற அளவில் உள்ளது.


உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் “ஃப்ரீ ரேடிக்கல்ஸ்” என்ற காரணிகளை மட்டுப்படுத்தும் ஃப்ளாவினாய்ட்ஸ் மற்றும் Kaempoferol & Quercetin போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் ஆகியவற்றால் நோய் எதிர்ப்பு சக்தியும், வயதாகும் தன்மையைத் தள்ளிப்போடும் ஆற்றலும் பெருஞ்சீரகத்திற்கு உள்ளது. பெருஞ்சீரகத்தில் உள்ள Anethole, Fenchone & Methyl Chavicol போன்ற காரணிகளால் உடலில் ஏற்படும் பூஞ்சைகள் தாக்கத்தினை எதிர்த்துப் போரிடுகின்றது.

பெருஞ்சீரகத்தில் உள்ள பல்வேறு காரணிகள் உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. மேலும், வாயுத்தொல்லையைக் குறைக்கின்றது. மேலும், செரிமான மண்டலத்தில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், மலம் இலக்கியாகவும், ஆன்ட்டி-ஸ்பாஸ்மோட்டிக்காவும் (தசைபிடிப்பு மாதிரி, அதனை சரிபடுத்தும் எதிரி..!) பெருஞ்சீரகம் செயல்படுகின்றது.

பெருஞ்சீரகம் சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பாதிப்பைத் தடுக்கின்றது. பெருஞ்சீரகம் பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மார்பகம் மற்றும் ஈரல் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றலும் பெருஞ்சீரகத்திற்கு உண்டு. பெருஞ்சீரகமானது, கொழுப்பு மற்றும் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால், உடல் எடையைக் குறைக்கும் மருந்தாகும்.


பெருஞ்சீரகம் மாதவிடாய் வலியைக் குறைக்கின்றது, வெள்ளைப்படுதல் என்று சொல்லக்கூடி ‘Leucorrhoea’ என்ற நோயைச் சரிப்படுத்துகின்றது மற்றும் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுகின்றது. பெருஞ்சீரக இலையின் டிகாஷன், பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. மேலும், விஷக்காளானில் உள்ள விஷத்தை முறிக்கின்றது. பெருஞ்சீரகத்தினை உலர்ந்த, வெளிச்சம் குறைவான, மிதமான குளிர்வான பகுதியில், காற்றுப் புகா உணவுத் தரக் கொள்கலனில் பாதுகாத்து வைத்தால், மூன்றாண்டுகள் வரைப் பயன்படுத்தலாம். பெருஞ்சீரகத்தின் மணம் மற்றும் நிறத்தை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமெனில், ஃப்ளாரெஸண்ட் லைட் வெளிச்சத்தில் அதனை வைக்கக்கூடாது.

பெருஞ்சீரகத்தில் கலப்படம்:

பெருஞ்சீரகத்தில் பெருஞ்சீரகப் பதர், சீரகம், புல் விதை, மண், மரத்தூள், செயற்கை நிறமி ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன. இதேபோல, பெருஞ்சீரகப் பொடியில் மரத்தூள், புல் (பொடியாக), செயற்கை நிறமி ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன. அவற்றை கண்டுபிடிக்க ஒரு கண்ணாடி டம்பளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தினை அதில் போட்டால், புல் விதை மற்றும் பெருஞ்சீரகப் பதர் மிதக்கும். ஆனால், உண்மையான பெருஞ்சீரகம் டம்பளரின் அடிப்பாகத்தில் தேங்கும்.


ஒரு கண்ணாடி டம்பளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தினை அதில் போட்டால், செயற்கை நிறமி கலந்த சீரகம் எனில், தண்ணீரில் நிறமி கலந்து, தண்ணீரின் நிறம் மாறும். ஆனால், தூய்மையான பெருஞ்சீரகம் எனில், அவ்வாறு நிறம் மாறாது. பெருஞ்சீரகத்தில் செயற்கை நிறமூட்டியதற்காக, பல வழக்குகளை உணவு பாதுகாப்புத் துறை பதிவு செய்துள்ளது.

மேலும், சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் ‘சீரக மிட்டாய்’ என்பது, பெரும்பாலும் பெருஞ்சீரகம், சக்கரை மற்றும் செயற்கை நிறமியின் கலவையாகும். இதில் கவனிக்க வேண்டியது, வண்ணமில்லாத சீரக மிட்டாயை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழகுவோம்.. மேலும், மிட்டாயோடு நின்றுவிடாமல், பல்வேறு நற்பலன்களைக் கொண்டுள்ள பெருஞ்சீரகத்தினை, தினமும் சரியான அளவில் உணவில் சேர்த்து எடுத்துக்கொண்டு, பெருவாழ்வு வாழ்வோம் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story