பண மோசடி வழக்கு: விசாரணைக்கு ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜர்
பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு இரண்டாவது முறையாக இன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 13ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை விசாரணைக்காக கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அப்போது தொடர்ந்து சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது .
தற்போது இரண்டாவது முறையாக கே டி ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜரானார் . அவரிடம் மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்தும் ஆதாரங்கள் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஸ்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.