ஸ்ரீவில்லிபுத்தூரில் சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிய பள்ளி வாகனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுரங்கப்பாதை தண்ணீரில் பள்ளி வாகனம் சிக்கி கொண்டது.

Update: 2024-01-03 09:47 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில், சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி வேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ரயில்வே சுரங்கபாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் சிக்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள சிவகாசி சாலையில் இருந்து, அச்சம் தவிழ்த்தான் செல்லும் சாலையில், அத்திகுளம் கண்மாய் கரை உள்ள பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சித்தாலம்புத்தூர், அத்திகுளம், அச்சம்தவிழ்த்தான், நாச்சியார்கோவில், அணைத்தலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்த சுரங்கப்பாதையில் லேசான மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றும் வசதி இருந்தும் ஊழியர்களின் அலட்சியத்தால் எப்போதும் தண்ணீர் தேங்கியே இருந்து வருகிறது.


இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து, நாச்சியார்பட்டிக்கு சென்ற பள்ளி வேன் ஒன்று, சித்தாலம்புத்தூர் ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடி அளவிற்கு தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கி பழுதானது. இதனால் வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் வேனில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். அப்போது அந்த வழியாக டிராக்டர் வாகனத்தில் வந்த விவசாயி ஒருவர் பொது நலன் கருதி  பள்ளி வேனை தனது டிராக்டர் வாகனத்தின் மூலம் கயிறு கட்டி இழுத்து மீட்டார்.

இந்த சுரங்கப்பாைதையில் அடிக்கடி இது போல வாகனங்கள் சிக்கி வருகின்றன. எனவே உடனடியாக ரயில்வேத்துறை ஊழியர்கள் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி  சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News