மேல்மலையனூர் கோயிலில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் மேல்மலையனூர் கோயிலின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது.

Update: 2022-06-23 13:13 GMT

மேல்மலையனூர் கோவில் திருவிழா தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (23.06.2022) மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 28.06.2022 அன்று அமாவாசை முன்னிட்டு, அங்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக வசதிகள் செய்திடவும், குடிநீர் வசதிகள் தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்,

இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் திருக்கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் காவல்துறையினர் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 வாகனங்கள் திருக்கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், உணவு கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் காலாவதிப் பொருட்களை கண்டறிந்து அகற்றிட வேண்டும். தீயணைப்புத்துறையயின் மூலம், கோவில் வளாகத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவித்தார்.

ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News