மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

விழுப்புரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2024-01-18 17:38 GMT

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரெட்டணை பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அந்த பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் (வயது 45) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் இது குறித்து விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது புகார் கொடுத்தனர்.

இதன் பேரில் கடந்த 16 ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த விவகாரம் அறிந்து பள்ளி முதல்வர் கார்த்திகேயன் தலைமறைவானார். இந்த நிலையில், இன்று பள்ளி முதல்வர் கார்த்திகேயன் விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்திகேயனை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளி முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பது, மாணவர்களுடன் ஆசிரியைகள் நெருங்கி பழகி அவர்களை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களை தாண்டி தற்போது முதல் முறையாக பள்ளி முதல்வரே இதுபோன்ற வழக்கில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News