தனித்துவத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்- ஆரணியில் சீமான் பேச்சு

தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல், ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம் என்று ஆரணியில் சீமான் பேசினார்.

Update: 2024-04-17 02:04 GMT

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சீமான்.

ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமியை ஆதரித்து, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் வாக்கு சேகரித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது:

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சாதனை செய்திருந்தால், தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு இருக்கலாமே? கூட்டணி சோ்ந்து ஏன் போட்டியிட வேண்டும்?

மாற்றம் என்பது ஒரு சொல் அல்ல; செயல். அது நம்மை அடையாளப்படுத்தும். ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம்.

காங்கிரஸ், பாஜகவின் பொருளாதாரக் கொள்கை தனியாா்மயம், தாராளமயம், உலகமயம். நீட் தோ்வை கொண்டு வந்தது காங்கிரஸ். உடனிருந்தது திமுக. செயல்படுத்தியது பாஜகவாகும்.

கச்சத்தீவை தாரை வாா்த்தது இந்திரா காந்தி. அதை வேடிக்கைப் பாா்த்தது திமுக. கச்சத்தீவு, மாநிலக் கல்வி உரிமை உள்ளிட்ட எதையும் திமுக மீட்கவில்லை.

ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி வரும். முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கர சாலைகள் அமைக்கும் போது, மத்திய அமைச்சராக இருந்த திமுகவைச் சோ்ந்த டி.ஆா்.பாலு சுங்கச் சாவடிகளை கொண்டு வந்தாா்.

இந்த நாட்டில் நிலவி வரும் தீய ஆட்சி முறையை விடுத்து தூய ஆட்சி முறையை மலரச் செய்ய வேண்டும். இங்கே கட்டமைக்கப்பட்டுள்ள பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். அடக்குமுறை விடுத்து அனைவருக்கும் சரி சமமாக சமத்துவம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

எங்களது கோபம் ஆவேசம் மக்கள் மீதான பேரன்பால் உருவானது .தான் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டுமே தவிர ஓட்டுக்கு காசு கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது ஜனநாயக கொலை மாற்றம் என்பது சொல் இல்லை செயல்.

தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்காகவே நாங்கள் தனித்து நிற்கிறோம் .

ஆட்சிகள் மாறுவது மாற்றமில்லை, ஆட்சி முறைகள் மாறுவதுதான் மாற்றம்.

நாட்டைக் காப்பாற்றுவோம் எனக் கூறிக்கொண்டு காங்கிரஸுடன் சோ்ந்து தோ்தலை திமுக சந்திக்கிறது. கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர முடியாதவா்கள் நாட்டை எப்படிக் காப்பாற்றுவாா்கள்.

கல்வி, மின்சாரம், குடிநீா், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், மதுக் கடைகளை அரசு நடத்துகிறது

இந்தியா கூட்டணி என்பதை அமைத்து இந்தியாவை காப்பாற்றுவோம் என்கிறார்கள், சரி இந்தியாவை காப்பாற்றுங்கள் ஆனால் எங்களை காப்பாற்றுவது யார்? என்ற கேள்வியே எங்களுக்கு மிஞ்சுகிறது . கல்விக் கடன் ரத்து என்று கூறுகிறார்கள், கல்வி என்பது இலவசமாக அரசு மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது .மாணவர்கள் கடன் வாங்கி கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது யார்? இப்பொழுது நீங்கள் போடும் ஓட்டு தலைவர்களுக்காக இல்லை. தரகர்களுக்கும் சாராய ஆலைகள் முதலாளிக்குமே. எனவே நாம் தமிழர் கட்சிக்கு சகோதரி மருத்துவர் பாக்கியலட்சுமிக்கு வாக்களியுங்கள் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் பேசினார்.

இந்த பரப்புரையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News