மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் கட்டிலில் இருந்து தவறி விழுந்து மரணம்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவியான 55 வயதாகும் சாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சாந்தி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கட்டிலில் படுத்திருந்த அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே தரையில் விழுந்தார். அதில் அவருக்கு தலை, முகம், வாயில் ரத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.