அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-05-02 02:13 GMT

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பெருமான்

ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.  சித்திரையில் திருவோணம் நக்ஷத்திரத்திலும், ஆனியில் உத்திரம் நக்ஷத்திரத்திலும்,மார்கழியில் திருவாதிரை நக்ஷத்திரத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி, மாதங்களில் வரும் சதுர்த்தசி திதியிலும் நடராஜருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தேவர்களின் பகல்பொழுதான உத்திராயணத்தின் நான்காம் மாதம் சித்திரை. வஸந்த ருதுவில் சித்திரை மாதம் தேவர்களின் உச்சிப்பொழுதாகும். இந்த மாதத்தில் வரும் திருவோண நக்ஷத்திரத்தில் தேவர்கள் இறைவனுக்கு உச்சிகால பூஜை செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதனை திருவோண அபிஷேகம் அல்லது வஸந்த நீராட்டு என்று சொல்வர். அபிஷேகம் என்றால் மங்கள ஸ்நானம். அதாவது மங்கள நீராட்டு. வைஷ்ணவ ஸ்தலங்களில் ஸ்வாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை "திருமஞ்சனம்" என்றும் சிவ ஸ்தலங்களில் "அபிஷேகம்" என்றும் கூறுவது வழக்கம்.

ஆனால் மிகச்சிறப்பாக சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனித்திருமஞ்சனம் என்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆருத்ரா அபிஷேகம் என்றும் மற்ற நான்கு மாதங்களில் நடைபெறும் அபிஷேகத்தை நடராஜர் அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியன் சிவனின் அம்சமாகும். சூரியபகவான் சித்திரையில் உச்சமாகும்போது சந்திரனின் நக்ஷத்திர நாளில் நடராஜருக்கு அபிஷேகம் மிகவும் விசேஷமாகும். அபிஷேகத்தன்று இறைவனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனபொடி, பஞ்சாமிர்தம்(பழங்கள்), தேன் சந்தனம். திருமஞ்சனம் செய்யபடுகிறது. பிறகு ஸ்நபனமாக கும்பதீர்த்தம் சேர்க்கப்படுகிறது. இதனால் பகவான் குளிர்ச்சி அடைகிறார். சான்னித்யம் கிடைக்கிறது.  ஆண்டுக்கொரு முறை வரும் சித்திரை உச்சி கால அபிஷேகத்தைத் தரிசித்தால், பிறப்பிலா பேரின்ப நிலையை எட்டலாம் என்பார்கள், ஆன்மிகப் பெரியோர்கள்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில்

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ நடராஜர் சன்னதியில் சித்திரை திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனபொடி, பஞ்சாமிர்தம்(பழங்கள்), உட்பட பல்வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு தீபாரதனையும் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News