அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடைபெற்ற தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே, எளிமையாக தீர்த்தவாரி நடைபெற்றது.

Update: 2022-01-19 01:33 GMT

சாமியின் சூலரூபமான அஸ்திரதேவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில்,  ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். அருணாசலேஸ்வரருக்கு தை மாதம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி நாளில் கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தினால் ரத்து செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி,  2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி  காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க 3-ம் பிரகாரத்தில் இருந்து 5-ம் பிரகாரத்திற்கு சாமி எழுந்தருளினார்.

தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், அன்னதான கூடம் அருகில் வைத்து சாமியின் சூலரூபமான அஸ்திரதேவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது. தொடர்ந்து பால், மஞ்சள், சந்தனம் போன்றவற்றின் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி பிரகார உலா வந்தார்.

வழக்கமாக மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, திருவண்ணாமலையில் பல்வேறு கிராமங்கள் வழியாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.  அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் கொரோனா நடவடிக்கை காரணமாக தொடர்ந்து 2-ம் ஆண்டாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டாவது சாமியை காணலாம் என்று ஆர்வமாக இருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News