'இடைத்தேர்தலை சந்திக்கும் பலம், அதிமுக கூட்டணிக்கு இல்லை'- கே எஸ் அழகிரி குற்றச்சாட்டு

Aiadmk Latest News - திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, 'இடைத்தேர்தலை சந்திக்கும் பலம் அதிமுக கூட்டணிக்கு இல்லை,' எனக் கூறினார்

Update: 2023-01-25 00:54 GMT

பொதுக்கூட்ட மேடையில் கே எஸ் அழகிரி , இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்.

Aiadmk Latest News - திருவண்ணாமலையில் மண்டல அளவிலான காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் குமாா் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

மேலிடப் பாா்வையாளா் கொடிக்குனில் சுரேஷ், மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

இக்கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது,

திருவண்ணாமலைக்கு வந்தால் அதிசயங்கள் நடக்கும் என்று கூறுவதை இதுவரை நான் ஏற்கவில்லை. ஆனால், தற்போது இந்த கூட்டத்தினை பார்த்து நம்புகின்றேன். நான் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை நம்பி வந்துள்ளேனே தவிர, வேறு எந்த அண்ணாமலையையும் நம்பி வரவில்லை. நான் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று நினைத்தாலும், காங்கிரஸ் மேலிடம் சொல்லும் போது என்னால் நிற்காமல் இருக்க முடியாது. என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருமுறையும், மத்திய அமைச்சராக ஒரு முறையும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கியவர்  சோனியா காந்தி தான்.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவும், தமிழக தலைவர் அழகிரியும் நான் தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதால் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வெற்றி அடைவேன். இந்திய ஒற்றுமை நடை பயணம் சென்று கொண்டிருக்கும் ராகுல்காந்தி மிகப்பெரிய விஷயத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று கொண்டிருப்பது மகத்தான சாதனை மட்டுமல்ல, மகத்தான தியாகத்தையும் செய்து கொண்டிருக்கிறார்.

பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும், பிரதமர் மோடியை நாட்டை விட்டு ஓட வைக்க வேண்டிய அளவில் இந்த நடைபயணத்தின் வெற்றியை காட்ட வேண்டும். இதன்மூலம் நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டும், என்றாா்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசியதாவது,

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ராகுல் நடைபயணம் மேற்கொள்வது பிரதமராக வேண்டும் என்பதற்காக அல்ல. நாட்டின் ஒற்றுமைக்காகவே நடக்கிறாா். நமது ஒற்றுமையை ஜாதி, மதம், மொழி, நிலத்தின் பெயரால் பிரிக்க ஆா்.எ.ஸ்.எஸ்., மோடி அரசு விரும்புகிறது.

பாஜக வளர்ந்து விட்டது என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆகவே, அதிமுகவின் கூட்டணி சார்பில் அண்ணாமலையே போட்டியிடட்டும். யார் வெற்றி பெறுகின்றனர் என்று பார்க்கலாம். அப்போது, பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளதா... இல்லை தேய்ந்து போகின்றதா என்று தெரியும். இடைத்தர்தலைச் சந்திக்கும் பலம் அதிமுக கூட்டணிக்கு இல்லை,  என்றாா்

இக்கூட்டத்தில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் தொடா்ச்சியாக 'அரசியலமைப்பைப் பாதுகாப்போம், கையோடு கை கோா்ப்போம்' என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், திருவண்ணாமலை மண்டல காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News