மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு இளைஞர்கள் திடீர் சாலை மறியல்

திருவண்ணாமலையில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு சாலை மறியலில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

Update: 2022-07-18 00:51 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள்.

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் ரெயில்வே கேட் அருகில் இளைஞர்கள் ஒன்றுகூடி உயிரிழந்த ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு கையில் கருப்பு கொடிகளை ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாலை டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்ட இளைஞர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News