சட்டத்திற்கு புறம்பாக கரும்பை எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

சட்டத்திற்கு புறம்பாக மற்ற ஆலைகளுக்கு கரும்பை எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-02-07 02:45 GMT

கோப்பு படம்

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கரும்பை சட்டத்திற்கு புறம்பாக எடுத்து செல்வதாக கிடைத்த தகவலையடுத்து அவ்வாறு எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலை 2021-22 சிறப்பு மற்றும் 2022-23 பிரதம அரவைப் பருவத்திற்கு 13 ஆயிரத்து 200 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, இந்த அரவைப் பருவத்திற்கு 5 லட்சத்து 3 ஆயிரம் டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு ஆலையின் தொடர் அரவை நடைபெற்று வருகிறது.

ஆலையின் விவகார எல்லை பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பினை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச்செல்ல தடை செய்து சர்க்கரைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினை மீறி இடைத்தரகர்கள் மூலம் ஆலையின் விவகார எல்லை பகுதிகளில் இருந்து முறையற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பு எடுத்து செல்லப்படுகிறது. இந்த செயல் கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966-ன் விதி எண்.6-ன் உள்விதி (1) (எப்) -ஐ மீறும் செயலாகும்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லை பகுதிகளில் அரவைப் பருவத்திற்கு பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பினை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்து செல்வதால் அரசின் பங்களிப்புடன் கூடிய ஆலையான கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவைத்திறன் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே கரும்பினை இதர சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்து செல்ல ஆலை நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றுச்செல்ல வேண்டும்.

எனவே முறையற்ற வகையில் இடைத்தரகர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பை சட்டத்திற்கு புறம்பாக எடுத்து செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு மீறும் பட்சத்தில் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News