அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன திருட்டில் ஈடுபட்ட சாமியார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன திருட்டில் ஈடுபட்ட சாமியார் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-14 01:38 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சாமி சன்னதிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலில் காவி உடையணிந்து மொட்டை அடித்த நிலையில் இருந்த நபர் குச்சி ஒன்றை உள்ளே செலுத்தி காணிக்கை பணத்தை திருட முயற்சி செய்வது போன்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதை கண்ட கோவில் அலுவலர்கள் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான நபரின் புகைப்படத்துடன் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் திருட முயன்றது கிரிவலப்பாதையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில் இருக்கும் சாமியார் ஒருவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டியன் (வயது 32) என்பதும், கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியாராக இருப்பதும் தெரியவந்தது. இவர் நூலில் சுவிங்கம் மிட்டாயை (பபுள்கம்) ஒட்டி அதன் மூலம் உண்டியலில் இருந்து 2 முறை பணம் திருடி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News