தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: கலெக்டர் முருகேஷ் துவக்கி வைப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-13 05:42 GMT

பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 1243 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட உள்ளன. அதில் முதல்முறையாக இன்று சீலப்பந்தல் ஊராட்சி மற்றும் ஓலைப்பாடி ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். 

திருவண்ணாமலை வட்டாரத்தில் 146 பண்ணை குட்டைகளும், கிழ்பென்னாதூர் வட்டாரத்தில் 51 பண்ணை குட்டைகளும், துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் 55 பண்ணை குட்டைகளும், போளுர் வட்டாரத்தில் 50 பண்ணை குட்டைகளும், கலசபாக்கம் வட்டாரத்தில் 61 பண்ணை குட்டைகளும், சேத்பட் வட்டாரத்தில் 55 பண்ணை குட்டைகளும், செங்கம் வட்டாரத்தில் 165 பண்ணை குட்டைகளும், புதுப்பாளையம் வட்டாரத்தில் 68 குட்டைகளும், தண்டராம்பட்டு வட்டாரத்தில் 82 பண்ணை குட்டைகளும், ஜவ்வாதுமலை வட்டாரத்தில் 40 பண்ணை குட்டைகளும், செய்யாறு வட்டாரத்தில் 56 பண்ணை குட்டைகளும், அனக்காவூர் வட்டாரத்தில் 65 பண்ணை குட்டைகளும், வெம்பாக்கம் வட்டாரத்தில் 66 பண்ணை குட்டைகளும், வந்தவாசி வட்டாரத்தில் 71 பண்ணை குட்டைகளும், தெள்ளாறு வட்டாரத்தில் 68 பண்ணை குட்டைகளும், பெரணமல்லூர் வட்டாரத்தில் 57 பண்ணை குட்டைகளும், ஆரணி வட்டாரத்தில் 41 பண்ணை குட்டைகளும், மேற்கு ஆரணி வட்டாரத்தில் 46 பண்ணை குட்டைகளும், ஒரு பண்ணை குட்டை ரூ.1.78 இலட்சம் வீதம் 1243 பண்ணை குட்டைகளுக்கு ரூ.22.12 கோடி மதிப்பில் அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு பண்ணைக்குளமும் 72 அடி நீளமும், 36 அடி அகலம், 5 அடி ஆழம் எனும் அளவில் 3,63,000 லிட்டர் மழைநீரினை தேக்கி வைக்கும் அளவு உருவாக்கப்படவுள்ளது. மாவட்டம் முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 579 பஞ்சாயத்துகளில் 1243 பண்ணை குட்டைகள் உருவாக்கப்படவுள்ளது. அந்தந்தப் பகுதி விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் இந்த 1243 பண்ணைக் குளங்களை உருவாக்கி அவர்களிடமே தமிழக அரசு ஒப்படைக்கவுள்ளது. இந்தப் பண்ணைக்குளங்கள் அமைக்கப்பட்டால் 40.58 கோடி லிட்டர் தண்ணீரினை தேக்கி வைக்க இயலும். வீணாக ஆவியாகும் மழை நீரினை இவ்வாறு தேக்கி வைத்தால் குடிதண்ணீர் தேவையில் தன்னிறைவடைந்த பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் மாற இது உதவியாக இருக்கும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும், விவசாய பெருமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக மாறிவிடும்.

இந்த பண்ணக்குட்டை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நிலத்தடி நீரை சேமித்து வைப்பதற்காகவும், கோடை காலங்களில், தண்ணீர் இல்லாத நேரங்களில் பண்ணை குட்டைகளில் உள்ள நீரை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இந்த பண்ணை குட்டை முழுவதும் பயனாளிகளுக்கு முழு மானியத்தொகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊர்க வளர்ச்சி முகமை பிரதாப்., உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, செயல்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தணிகாச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பயனாளிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News