வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-19 00:55 GMT

பைல் படம்.

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை (வயது) முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் க்செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-23 -ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1.1.2022 -ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

தாலுகா அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று மற்றும் தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.

நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News