வெறையூர் அருகே டிராக்டர் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு

வெறையூர் அருகே டிராக்டர் மோதியதில் தந்தை மகன் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-16 06:30 GMT

பரிதாபமாக உயிரிழந்த முனியன் , செந்தூர்பாண்டியன்.

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் (வயது 35), தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (32), இவர்களுக்கு ஜெசிகா (14), என்ற மகளும், செந்தூர்பாண்டியன் (12), லோகேஸ்வரன் (9) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

ஜெசிகா வாழாவெட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பும், செந்தூர்பாண்டியன் டி.கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பும், லோகேஸ்வரன் 4-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில்  காலை முனியன் மகன்கள் செந்தூர்பாண்டியன், லோகேஸ்வரன் ஆகியோரை அழைத்துக் கொண்டு அப்பகுதியிலுள்ள ஒரு பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வாணாபுரம் பகுதியில் இருந்து வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கினர். இதில் முனியனும், செந்தூர்பாண்டியனும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த லோகேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வெறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பேக்டர் தமிழரசு மற்றும் போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அழகுராணி விசாரணை நடத்தி வருகிறார். தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News