திருவண்ணாமலையில் போட்டி குறைதீர்வு கூட்டம் நடத்த முயன்ற விவசாயிகள்

குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் போட்டி குறைதீர்வு கூட்டம் நடத்த முயன்ற விவசாயிகள்

Update: 2021-12-01 06:27 GMT

திருவண்ணாமலையில் போட்டி குறைதீர்வு கூட்டம் நடத்த முயன்ற விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் இறுதி வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். இந்த மாதத்திற்கான குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக குறைதீர்வு கூட்டத்தை ரத்து செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.  இன்று கூட்டமானது நடைபெறும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் , இது குறித்து எந்தவிதமான தகவலும் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலக வரவேற்பு வளாகம் முன்பு போட்டி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் உரிமை மீட்பு குழு நிர்வாகி தாமஸ் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் முயன்றனர்.

தகவலறிந்த போலீசார் அவர்களை தடுத்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கேட்டை மூடினர்.  இதையடுத்து விவசாயிகள் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனடியாக விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். உடனடியாக மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News