தி.மு.க.வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாரிதாஸ் வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திமுகவினர் வதந்திகளை பரப்புகின்றனர் என பாஜக தலைவர் குற்றச்சாட்டு

Update: 2021-12-17 14:18 GMT

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்

திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு, தெற்கு மண்டல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை வந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று  தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 

பாஜக ஆட்சிக்கு வந்திருந்தால், அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கிக் கொடுத்திருப்போம். பஞ்ச பூத தலங்களில் யானையைக் கொடுக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் வலியுறுத்தப்படும்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முடியாதது, லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் துயரமாக உள்ளது. தீபத் திருவிழாவுக்கு வந்தவர்களை தீவிரவாதிகளை சோதனையிடுவதுபோல் காவல்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து விட்டால், காவல்துறையின் கம்பீரத்தைப் பார்க்கலாம். காவல்துறை கம்பீரமாக இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

அ.தி.மு.க.வினர் வீடுகளில் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை வாய்ப்பாகப் பார்க்கிறோம். கட்சியை வலுப்படுத்த உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. மக்களுக்குச் சிறந்த தலைவர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் மூலமாக மக்கள் பணி செய்ய உள்ளோம். கமிஷன் பெற்று பணியாற்றும் தலைவர்களாக இல்லாமல், முன்மாதிரியாக மக்கள் பணி செய்வார்கள். பாஜக அரசின் சாதனைகள், திமுக ஆட்சி செய்யும் தவறுகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்வோம். உள்ளாட்சியில் 80 சதவீதப் பணிகள் மத்திய அரசின் பணியாகும்.

மாரிதாஸ் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்த கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். நீதித்துறையை அரசியலுக்கு மேலே வையுங்கள் சில வழக்குகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக தீர்ப்புகள் வந்துள்ளது. நீதித்துறையில் பா.ஜ.க. தலையிடாது.

மாரிதாஸ் வழக்கை விசாரித்த நீதிபதி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பது தவறானது. அபத்தமான குற்றச்சாட்டுகளை நிறுத்தி கொள்ளுங்கள்.

தமிழகத்தில் 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம் பேர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் மூலம் ஒமிக்ரான் பாதிப்பிலிருந்து தப்பலாம். எனவே தயவு செய்து அனைவரும் 2 கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.தற்போதைக்கு வேறு தடுப்பூசி தேவைப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News