ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்

Update: 2022-08-06 01:55 GMT

படவேடு ரேணுகாம்பாள் வீதி உலா.

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் கிராம தேவதை பாலியம்மனுக்கு ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு 205 பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டில் முத்தாலம்மன் கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளி விழா முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர். காலையில் அம்மனுக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் ஆலய வளாகத்தில் தீக்குண்டம் அமைக்கப்பட்ட ஏராளமான ஆண்களும் பெண்களும் அம்மனுக்கு விரதம் இருந்து தீமிதித்தனர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.

படவேடு ரேணுகாம்பாள் கோவில்

3-ம் வெள்ளியான நேற்று படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். 

ஏராளமான பெண்கள் வேப்பிலை சேலை அணிந்து கோவிலை வலம் வந்தும், அம்மன், பரசுராமன் சிலைகளை தலையில் சுமந்தவாறும் கோவிலை வலம் வந்தனர். மாலையில் நாதஸ்வர கச்சேரியும், இரவில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. குடும்பமாய் மாட்டு வண்டி, டிராக்டர், உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, கோவில் செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

ஆரணி:

ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

போளூர்:

போளூரை அடுத்த வசூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதை தொடந்து அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு வழிபாடு நடந்தது. போளூர் காளி அம்மன், போலாட்சி அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

Similar News