திருவண்ணாமலை தங்கமணி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

Update: 2022-04-29 14:03 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, தங்கமணி இறப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதன்மீது உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் சட்டபேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்துள்ள தட்டரனை கிராமத்தில் வாழும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனை வழக்கில் கடந்த ஏப்.26 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.மருத்துவமனையில் மரணம்: அடுத்த நாளான ஏப். 27 அன்று காலை வலிப்பு வந்ததாகவும், மாலை இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவுடன் அவரது மகன் தினகரன், தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், மேலும் கலால் துறை காவலர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் இறந்த , மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள தங்கமணியின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளித்திட வேண்டும். இவ்வழக்கை நேர்மையான முறையில் விசாரணை நடத்திட உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த ஏப். 26ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்துள்ளனர். அன்றைய தினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுமார் இரவு 7.40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி சுமார் இரவு 8.40 மணியளவில் உயிரிழந்துள்ளார்.தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு (ஏப். 28), நீதித் துறையினுடைய நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

Tags:    

Similar News