ஒரே சாலை, இரண்டு முறை திறப்பு விழா: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலையை அதிமுக, திமுக போட்டி போட்டு நிகழ்ச்சி நடத்தி திறந்து வைத்தனர்

Update: 2023-06-07 02:35 GMT

சாலையை திறந்து வைத்த அதிமுக எம்எல்ஏ அக்ரிகிருஷ்ணமூர்த்தி, திமுகவை சேர்ந்த நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன்

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலையை அதிமுக திமுக போட்டி போட்டு நிகழ்ச்சி நடத்தி திறந்து வைத்தனர்

திருவண்ணாமலை நகரில் கடம்பராயன் தெரு முக்கிய தெருக்களில் ஒன்றாகும். மாட வீதி, வேட்டவலம் சாலை, காந்திநகர், திருக்கோவிலூர் ரோடு போன்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலை ஆகும். மேலும் நகை கடைகள், அடகு கடைகள் நிறைந்த கடம்பராயன் தெரு ஒரு முக்கிய வியாபார சாலையாகும்.

திருவண்ணாமலை நகராட்சி 16-வது வார்டில் உள்ள கடம்பராயன் தெருவில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. நகராட்சி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. மக்களின் பங்களிப்பாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டன.

16-வது வார்டு கவுன்சிலரான  அதிமுகவைச் சேர்ந்த சந்திர பிரகாஷின் முயற்சியால், வர்த்தக வீதிகளில் முக்கியத்துவம் பெற்ற கடம்பராயன் தெருவில் சாலை முழுவதும் ஐந்து இடங்களில் 4 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கண்காணிப்பு கேமராக்கள், கழிவறை வசதி, குடிநீர் டேங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு முதன்மை வார்டு சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திறப்பு விழா நேற்று முன்தினம் (ஜுன் 5-ம் தேதி) நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால், அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், போளூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். இதன்பிறகு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. புதிய சிமென்ட் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் திமுகவினர் திமுக நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட சாலையை மீண்டும் நேற்று திறந்து வைத்தனர். நகராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். சாலையை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் திறந்து வைத்தார்

பின்னர் இது குறித்து திருவண்ணாமலை திமுக  நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் கூறுகையில், அமைச்சர் வேலு உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாடவீதியை சிமெண்ட் சாலையாகும் பணி தற்போது நடைபெற்று வருகிறது . மேலும் 39 வார்டுகளிலும் சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

திருவண்ணாமலையின் நகராட்சி அமைத்த சாலையினை போளூர் எம்எல்ஏ திறப்பது என்பது அரசியல் ஆகும். அந்த அரசியலை இங்கு செய்யக்கூடாது . இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக, திமுக என அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொருவராக திறந்து வைத்த சிமெண்ட் சாலையை நாளை எந்த கட்சிக்காரர்கள் திறந்து வைத்து, சாலையை தாங்கள் திறந்து வைத்தோம் என உரிமை கொண்டாடுவார்கள்?

எவ்வளவு முறை வேண்டுமானாலும் திறந்து கொள்ளட்டும் எங்களுக்கு தரமான சாலை வந்தால் சரிதான் என அப்பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் கூறினர்.

Tags:    

Similar News