பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 74 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை

4-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2023-03-31 01:46 GMT

கோப்புப்படம் 

4-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 74), கூலித் தொழிலாளி. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி 4-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த 9 வயது மாணவியை அவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சங்கரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் சங்கரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News