சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-07-19 01:50 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மேல்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன். இவரது நண்பர்கள் பாலாஜி, கார்த்திக். இதில் பாலாஜி என்பவர் மேல்நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் 3 பேரும் சேர்ந்து 7 வயது மதிக்கத்தக்க 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கோழி இறைச்சி கடையில் வைத்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த 3 பேர்களில் சமீபத்தில் மணிபாலன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த பாலாஜி (வயது 36) மற்றும் கார்த்திக் (32) ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.

Tags:    

Similar News