இறைச்சி விற்பனை குறைந்ததால், ஆடுகள் விலையில் சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்

கார்த்திகை, மார்கழி கோவில் சீசன் காரணமாக அமைந்து விட்டதால், இறைச்சி விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், ஆடுகளின் விலை சரிவால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Update: 2022-12-19 06:34 GMT

ஆடுகள் விலை சரிவால், கால்நடை வளர்ப்பாளர்களான விவசாயிகள் ஏமாற்றம். (கோப்பு படம் - ஆடுகள்)

கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை; அதிக விற்பனையும் நடக்காததால் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூரில் வாரச் சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் சனிக் கிழமை நடக்கும் இந்த சந்தைக்கு முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். சந்தை நாளன்று அதிகாலை முதல் ஆட்டுச்சந்தையும் இங்கு நடக்கிறது. 

இங்கு நடக்கும் வெள்ளாட்டுச் சந்தை மிக பிரபலமானதாக உள்ளது. பக்ரீத், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், அதிகளவிலான ஆடுகள் விற்பனையாகும். சனிக்கிழமையன்று அதிகாலை முதலே முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளக்கோவில், காங்கயம், சிவகிரி, கொடுமுடி, எழுமாத்தூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை சந்தையில் விற்க கூடுவார்கள்.

பல்வேறு ஊர்களில் இருந்து, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஆடுகள், குட்டிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இதனால் சந்தை நாளன்று, பல லட்சம் ரூயாய்க்கு வியாபாரம் நடைபெறும். இன்று நடந்த சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்து இருந்தபோதும், மார்கழி மாதம் முதல் வாரம் என்பதால் விலையும் குறைந்து காணப்பட்டது.

இதன்படி வெள்ளாடு 10 கிலோ குட்டி 7 ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 10 கிலோ குட்டி 6 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்றது. தற்போது திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இந்த ஆண்டு வருடாந்திர சராசரி மழை அளவை காட்டிலும் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் மானாவாரி நிலங்களில் போதிய மேய்ச்சலும், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருப்பதால் வளர்ப்புக்காக ஆடுகள் வாங்க ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர். இந்த வாரம் வளர்ப்பு ஆடுகள் 8000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. 

தற்போது துவங்கியுள்ள மார்கழி பக்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக உள்ளது. கடந்த மாதம் கார்த்திகை துவங்கிய உடனே, சபரிமலை சீசன் துவங்கி விட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இனி, வரும் தை மாதம், முருகன் சுவாமிக்கு தைப்பூசம் நடைபெறுவதால், முருக பக்தர்களும் விரதம் துவங்க உள்ளனர். இப்படி தொடர்ந்து, பக்தி நிறைந்த மாதங்களாக இருப்பதால், அசைவம் சாப்பிடுவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட, கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், இறைச்சிக்காக ஆடுகள் தேவை குறைந்து விட்டதால், ஆடு விற்பனை கணிசமாக குறைந்தும், விலையும் சரிந்து வருகிறது. 

Similar News