நுாற்பாலைகளுக்கு நேரடியாக பஞ்சு விற்பனை; மத்திய அரசுக்கு 'சைமா' கோரிக்கை

நுாற்பாலைகளுக்கு விவசாயிகள் நேரடியாக பஞ்சை விற்பனை செய்ய வேண்டும் என, மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு ‘சைமா’ தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-08-12 02:35 GMT

நுாற்பாலைகளுக்கு விவசாயிகள் நேரடியாக பஞ்சை விற்பனை செய்ய வேண்டும் என, ‘சைமா’ கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்:

கொரோனா தொற்று பாதிப்பு, அபரிமிதமான நூல் விலை உயர்வால் திருப்பூர் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைத்தறி, கைத்தறி ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நடப்பாண்டுக்கான பருத்தி சீசன் தொடங்கும் நிலையில், மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், ஜவுளித்தொழில் முழுமையாக பாதிக்கப்படும்.

தேவைக்கு மேல் கொள்முதல் செய்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கும் பெரும் வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனை கொள்கையை, முழுமையாக செயல்படுத்தாத இந்திய பருத்தி கழக நிறுவனம் ஆகியவற்றால் நூல் விலை உயர்வு, பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதற்கான தீர்வுகளை, பலமுறை  'சைமா' சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய பருத்தி கழகம் விவசாயிகளுக்கு நியாயமான விலையை நிர்ணயித்து, அதன்படி விவசாயிகள் நேரடியாக பஞ்சு அரைப்பவர்களுக்கும், நுாற்பாலைகளுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வியாபாரிகள் மறுக்கும்போது அல்லது கொள்முதல் செய்ய வராதபோது இந்திய பருத்தி கழகம் தலையிட்டு அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்த பருத்தியை அதிகமாக வாங்கி இருப்பு வைக்கும் வியாபாரிகளை தவிர்த்து உற்பத்தி செய்யக்கூடிய நூற்பாலைகளுக்கு விற்க வேண்டும்.

பருத்தி, பஞ்சு இருப்பு திருப்தியாக இருக்கும்போது கூட உள்நாட்டு உற்பத்திக்கு போதுமான அளவு வினியோகம் செய்து, மீதமுள்ள இருப்பை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அனுமதிக்க வேண்டும். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பருத்தி, பஞ்சு விஷயத்தில் நிபுணர் குழுவை அமைத்து, பருத்தி அதிகம் விளைவித்தல், வியாபாரிகள், இந்திய பருத்தி கழகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கொள்கைக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை அந்த குழு கூடி தேவையான பரிந்துரைகளை தர வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Similar News