மனைவியை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை

பல்லடம் அருகே குடிப்பழக்கம் காரணமாக, மனைவியை கொன்றுவிட்டு பால்வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-03 18:10 GMT

மனைவியை கொன்ற கணவன், துாக்கு போட்டு தற்கொலை

'குடி குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என்ற வாசகங்களுடன்தான், 'டாஸ்மாக்' மதுக்கடை பெயர் பலகைகள் காட்சி தருகிறது. மதுபான பாட்டில்களிலும், இந்த வாசகங்கள் காணப்படுகிறது. ஆனால், மதுபான விற்பனை, ஆண்டுதோறும் பலமடங்கு அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதே இல்லை. மதுபான விலை பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையிலும், தனது தினசரி வருமானத்தில் பெரும்பகுதியை இழந்தாலும், 'குடி'மகன்கள், மதுப்பழக்கத்தை கைவிட தயாராக இல்லை. இட்லி 10 ரூபாயா? என அதிர்ச்சியடையும் மதுபான பிரியர்கள், குவாட்டர் 150 ரூபாய் என்பதை மிக மிக சாதாரணமாகவே எடுத்துக்கொள்கின்றனர்.

இப்படி மதுபான பழக்கத்துக்கு அடிமையான கணவன், தாலி கட்டிய மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, தானும் துாக்கிட்டுக்கொண்டு உயிரிழந்த துயர சம்பவம், பல்லடத்தில் நடந்துள்ளது.  

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). பால்வியாபாரம் செய்து வந்தார். இவரது தனது மனைவி புஷ்பவதி (47). இவர்களது மகன் மதன்குமார். இவரும் தனது தந்தையுடன் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3;30 மணிக்கு, மதன்குமார் பால்வியாபாரத்துக்கு சென்று விட்டார். அதன்பின்னர் இவர்களது வீடு, நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் தங்கவேல் வீட்டிற்கு வந்து, ஜன்னல் வழியே வீட்டிற்குள் எட்டிப்பார்த்தனர்.

அப்போது பால் வியாபாரி தங்கவேல் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி புஷ்பவதி தரையில் அசைவற்று கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு உடனடியாக வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் தங்கவேல் இறந்த நிலையிலும், கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் புஷ்பவதியும் சடலமாக கிடந்தனர். இதையடுத்து தம்பதி உடலை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தங்கவேலுக்கு கடந்த சில மாதங்களாக அதிக குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவி இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, போலீஸ் விசாரணைக்கு பயந்து, தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து மகன் மதன்குமார் கொடுத்த புகாரை வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News