மருத்துவப்படிப்புக்கு தேர்வான அரசுப் பள்ளி மாணவிக்கு எம்எல்ஏ ஊக்கத் தொகை
மருத்துவம் பயில உள்ள கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவிக்கு எம்எல்ஏ பூண்டி கலைவாணன் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்
2021 நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற, கிளரியம் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் மற்றும் தமிழரசி இவர்களின் மூத்த மகள் கா. நிலவழகி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை மருத்துவ கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வு செய்து உள்ளார். இம்மாணவி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர். மேலும் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் சிறந்த மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய காமராஜர் விருதினை இரண்டு முறை பெற்றவர்.
நீட் தேர்வில் 244 மதிப்பெண்கள் பெற்றும் 7.5 சதவிகித அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரவரிசையில் 371 வது இடம் பெற்றார். சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். இந்த மாணவியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான பூண்டி கே. கலைவாணன் மாணவியின் சாதனையை பாராட்டிரூ 25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கினார். மேலும் அந்த மாணவிக்கு மருத்துவர்கள் அணியும் கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவித்து மாணவியை பாராட்டினார்.