திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை சீரமைப்பு பணி துவக்கம்
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரையை ரூ. 77 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பதற்கான பணி இன்று தொடங்கியது.
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது .இதன் தொடர்ச்சியாக உடனடியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் குளத்தில் இடிந்து விழுந்த 101 அடி சுவர் மற்றும் சேதமடைந்த நாற்பத்தி ஏழு அடி சுற்றுச்சுவர் முழுமையாக அகற்றி மொத்தம் 148அடி நீளத்திற்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 77 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பாலச்சந்தரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்..