திருவாரூர்: மனைவியை தாக்கிய தலைமை காவலர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு

திருவாரூரில் மனைவியை தாக்கிய சம்பவத்தில் தலைமை காவலர் மீது வன்கொடுமை பிரிவின் வீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-24 13:50 GMT

தலைமை காவலர் பால்ராஜ்.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே கௌஜியா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பெயர் குடியா. பால்ராஜ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கௌஜியா நகரிலுள்ள இல்லத்தில் கடந்த ஓராண்டு காலமாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பால்ராஜிக்கும், குடியாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது குடியாவின் பெற்றோர் வந்து இருவரிடமும் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பால்ராஜ் மற்றும் குடியாவிற்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பால்ராஜ் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து குடியாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குடியா மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு குடியாவை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் குடியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தலையில் 14 தையல் போடப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியாவிடம் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் குடியா தனது கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை  தட்டி கேட்டதால் தன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் தாலுகா காவலர்களிடம் குடியா புகார் அளித்துள்ளார். குடியா அளித்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் தலைமை காவலர் பால்ராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களை கொடூரமாக தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தலைமை காவலர் பால்ராஜ் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் மனைவி குடியா, மைத்துனர் பிரபாகரன், மனைவியின் உறவினர்கள் ராதா மற்றும் ராஜா ஆகிய 4 பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் 4 பேர் மீதும் மூன்று பிரிவின்கீழ் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு தரப்புகளிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து வரும் தலைமைக் காவலரே தன்னுடைய மனைவியை தாக்கிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News