திருவாரூர்: ஆதரவற்ற விதவைகளுக்கு வெள்ளாடுகள் வழங்கல்
திருவாரூர் அருகே அம்மையப்பனில் ஆதரவற்ற விதவைகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகளை எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட விதவைகளுக்கு 100% மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1000 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று, திருவாரூர் அருகே அம்மையப்பன் கால்நடை மருந்தகத்தில் 100 பயனாளிகளுக்கு தலா 2,000 ரூபாய் மதிப்பிலான ஆடுகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தனபால், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.