கமிஷன் கேட்கும் தி.மு.க.வினரை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் வருமானத்தில் ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட தி.மு.க. வினரை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-25 09:01 GMT

திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் அரசு மதுபான கடைகளில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பிரமுகர் ஒருவரின் உறவினர் என்று கூறிக்கொண்டு கடையின் வருமானத்தில் ஒரு சதவீதத்தை தருமாறு கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டாஸ்மாக் கடைகளின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணத்தை தர மறுத்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் திருவாரூர் விளமல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பணம் கேட்டு மிரட்டும் தி.மு.க. பிரமுகரின் உறவினர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத் துறை அமைச்சகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் கடைகள் திறக்காது போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதனிடையே உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட மேலாளர் உறுதியளித்ததன் பேரில் ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Tags:    

Similar News