திருவாரூர் மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசு

திருவாரூரில் நடந்த தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

Update: 2022-01-26 09:59 GMT

விழாவில் ஒரு மாணவிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார்.

திருவாரூரில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியபோது

18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்காளராக கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு 18 வயது நிரம்பியவர்களும் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்வதுடன் தங்களது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தினையொட்டி மாவட்ட அளவிலான பள்ளிகளில் நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விளமல், அரசு உயர்நிலைப்பள்ளி, திருவாரூர் வேலுடையார் அரசு மேல்நிலைப்பள்ளி, புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அன்பழகன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News