உரம் விற்பனையாளர்களுக்கு திருவாரூர் வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

முறைகேடாக உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-10-17 04:11 GMT

திருவாரூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உரம் தங்குதடையின்றி கிடைத்திடவும் ,உரிய விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் வேளாண் துறை மூலம் அவ்வப்போது உர ஆய்வாளர்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க வரும் போது யூரியா உரத்துடன் பிளாஸ்டிக் வாளியில் அடைக்கப்பட்டுள்ள நுண்ணூட்ட கலவை தயாரிப்பு ஆர்கானிக்  ஆக்டிவேட்டட் கலவை உரம் மற்றும் அரசு வழங்கும் நுண்ணூட்டம் போலவே விற்பனைக்கு வந்துள்ள புதிய தயாரிப்புகளை சேர்த்து வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

விற்பனை உரிமத்தில் அனுமதியின்றி பெறப்பட்ட உரங்களை யூரியா உரத்துடன் சேர்த்து வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது குறித்து புகார்கள் வந்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News