கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து - வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை.

திருவாரூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரவீந்திரன் எச்சரிக்கை.

Update: 2022-04-26 13:20 GMT

தனியார் உரக்கடைகளில் திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரவீந்திரன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கோடை பணப்பயிர் பருத்தி சாகுபடி கடந்த ஆண்டை விட பலமடங்கு அதிகரித்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள வடகரை பகுதியில் பருத்தி வயல்களை  மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரவீந்திரன் ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்டத்தில் செயற்கையாக உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதா என தனியார் உரக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரன் கூறுகையில் உரம் தட்டுப்பாடு மற்றும் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா என  கண்டறிய மாவட்டம் முழுவதும் வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் பேரில் குடவாசல் தாலுகாவில் புதுக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தனியார் உரக்கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது . உரத்துடன் இணை மருந்துகள் ஏதும் கட்டாயப்படுத்தி வழங்கினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும் இந்த மாதத்திற்கு தேவையான யூரியா 3900 டன் தேவைக்கு 2138 டன் கையிருப்பில் உள்ளது. மீதம் தேவைப்படும் உரம் இந்த வாரத்திற்குள் வந்துவிடும்.

இதேபோல் டி ஏ பி 1425 டன் தேவைக்கு 711 டன் உரம் வந்துள்ளது. பொட்டாஷ் உரம் 950 டன் தேவைக்கு 777 டன் இருப்பில் உள்ளது. கோடை சாகுபடி 15 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி செய்யப்படும். இந்த வருடம் கோடை நெல் சாகுபடி குறைந்து பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. குறிப்பாக பருத்தி 16 ஆயிரத்து 328 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 8ஆயிரத்து 128 ஹெக்டேர் சாகுபடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஆண்டு கூடுதலாக பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண் துறை ஹேமா ஹெப்சிபா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

Similar News