கேரள எல்லையில் பெயரளவில் சோதனை; தேனி சுகாதாரத்துறை கடும் அதிருப்தி

தேனி-கேரள எல்லைகளில் பெயரளவிற்கே சோதனை நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் கொரோனா எளிதில் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2021-08-03 08:00 GMT

காரில் வருபவர்களை சோனையிடும் போலீசார்.

தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இரு மாவட்டங்களுக்கு இடையே தினமும் பல ஆயிரம் பேர் சென்று வருகின்றனர். கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் தேனி மாவட்டத்தில் சிறப்பான கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் ஆறு பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நடைபெறும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பெயரளவிற்கே உள்ளது. குறிப்பாக சோதனை சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகளே கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டம் செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. மூன்று வழித்தடங்களிலும் தமிழக அரசும், கேரள அரசும் சோதனை சாவடிகளை அமைத்துள்ளன. போலீஸ் சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடி, வருவாய்த்துறை சோதனை சாவடி, சுகாதாரத்துறை சோதனை சாவடி, கால்நடைத்துறை சோதனை சாவடி என ஆறு சோதனை சாவடிகள் உ்ளளன.

இவைகளை கடந்து தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கோ செல்ல முடியும். இடுக்கி மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கோ வர முடியும். கேரள அரசும், இதே போல் தனது எல்லையில் சோதனை சாவடிகளை அமைத்துள்ளது.

இந்நிலையில், தமிழக சோதனை சாவடிகளில் பெயரளவிற்கே பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் சோதனை சாவடிகளில் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். அனைத்து தமிழக சோதனை சாவடிகளிலும் மந்த நிலை தான் காணப்படுகிறது. ஆனால் கேரளாவில் இருந்து அதிகளவில் வாகனங்கள் வருவதால் பல வாகனங்களை சோதிக்காமல், சோதிக்க நேரமின்றி அனுப்பி வைத்து விடுகின்றனர்.

கேரள எல்லையில் அப்படியில்லை. தமிழகத்தில் இருந்து வருபவர்களை சல்லடை போட்டு சலித்த பின்னரே அனுப்பி வைக்கின்றனர். அந்த அளவு துல்லியமான சோதனை நடக்கிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவில் தொற்று பரவ வாய்ப்பு இல்லை. ஆனால் கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கலெக்டர் முரளிதரன் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழக எல்லையிலும், பெயரளவிற்கு நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News