திடீர் இதயத்துடிப்பு முடக்கத்திற்கும் மாரடைப்பிற்கும் உள்ள வித்தியாசம்
மாரடைப்பிற்கும், திடீர் இதயத்துடிப்பு முடக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
மாரடைப்புக்கும், திடீர் இதய முடகத்திற்கும் உள்ள வேறு பாடு பற்றிஇந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மாரடைப்பு
இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால், இதயம் பாதிக்கப்பட்டு, தனது துடிப்பை நிறுத்திக் கொள்வதே மாரடைப்பு.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம்
நம் இதயத்துக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் இருந்து மின்னோட்டம் வருகிறது. சில காரணங்களால் இந்த மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் (Fluctuations) ஏற்படும் போது, இதயத் துடிப்பு திடீரென அதிகரித்தும் குறைந்தும் தாறுமாறாக செயல்படுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் பல்பு ஃபீஸ் போவதைப் போல நமது இதயம் சட்டென தன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. இந்த நிலையையே திடீர் இதயத் துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest) என்பார்கள். இதயத் துடிப்பின் திடீர் நிறுத்தத்தால், உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் தடைபடுகிறது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுவதால் மயக்க நிலைக்குச் சென்று, சுயநினைவு இழக்கும் நிலை ஏற்படுகிறது.
வேறுபாடு அறிவது எப்படி?
மாரடைப்பு ஏற்படும்போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒரு விதமான வலி (நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலி) ஏற்படுவது போல தோன்றும். இந்த வலி கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் பரவும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். இதயத்துடிப்பு இருக்கும், மூச்சுத் திணறல் உண்டாகும். வியர்த்துக் கொட்டி, மயக்கம் வரும். இதுபோன்ற அறிகுறிகள் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடியும். அதாவது மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினைவோடு தான் இருப்பார்கள். எனவே, உடனடியாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இதய அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து உயிரைக் காப்பாற்றுவர்.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம். மாரடைப்பை விடவும் அபாயகரமானது. ஏனெனில் எந்தவித அறிகுறியும் இல்லாமல், திடீரென ஒருவர் நிலை குலைந்து, மயக்க நிலையில் தரையில் சாய்ந்தால் அது திடீர் இதயத் துடிப்பு முடக்கமாக இருக்கலாம். இதயத் துடிப்பு நின்று விடுவதால், இதயத்தின் உள்ளிருந்து ரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் நிறுத்தி விடுகிறது.
முதலுதவி
எனவே, இதயத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்ல, நெஞ்சுப் பகுதியில் வேகமாக அழுத்தம் கொடுத்து, வாயோடு வாய் வைத்து செயற்கை மூச்சு அளிக்கும் முதலுதவி அளிக்க வேண்டும். இதற்கு சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation) முதலுதவி என்று பெயர். தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டுசென்றால் டிஃபிப்ரிலேஷன் (Defibrillation) கருவி மூலம் மின் தூண்டல் ஏற்படுத்தி, இதயத்துக்கு உயிரூட்ட முடியும். திரைப்படங்களில் நெஞ்சுப் பகுதியில் அயன் பாக்ஸ் போல ஒரு கருவியை வைத்து வைத்து எடுப்பார்களே அதுதான் டிஃபிப்ரிலேஷன் கருவி.