கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் முற்றுகை

தேனியில் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-02-14 18:25 GMT

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் விற்பனையாகும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க வேண்டும், உரிய விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல் இடம்பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தேனியில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததை கண்டித்து இன்று தேனி நகர அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமையிலானோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளார், கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும் கடை அனுமதி எண் பலகை, சிசிடிவி கண்காணிப்பு கேமிரா மற்றும் விற்பனை ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி நகர் காவல்துறையினர் டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் கடையின் முன் விலைப்பட்டியல் வைக்கப்பட்டு, பெயர்ப்பலகையும் மாட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News