மேகமலையில் காட்டுயானை மீண்டும் அட்டகாசம் நேற்று இரவு ஒரு நபரை அடித்துக் கொன்றது

தேனி மாவட்டம் மேகமலை மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும்.மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

Update: 2020-12-24 05:04 GMT

மேகமலையில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஏலத்தோட்டங்கள், காபி எஸ்டேட்டில் இவர்கள் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மேகமலை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வலம் வருகின்றன. பெரும்பாலும் இவை அங்குள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த தொந்தரவும் தருவதில்லை.

ஆனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று புதிதாக சுற்றிவருகிறது. கடந்த மாதம் 60 வயது முதியவரை அடித்து கொன்ற நிலையில் நேற்று நள்ளிரவு முத்தையா (55) என்பவரது வீட்டின் கதவை உடைத்து அவரை அடித்துக் கொன்றுள்ளது.

இன்று அதிகாலை இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கம்பம் கிழக்கு வனச்சரகர் கர்ணன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் ஹைவேவிஸ் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே வாரத்தில் இரண்டு நபர்களை யானை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த யானையை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News