தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் காரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் காரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி.
தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் ( வயது 35 ). தஞ்சை பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 22). இவர்கள் இருவரும் தஞ்சையில் இருந்து காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் . காரை விஜய் ஓட்டி வந்துள்ளார். அப்போது வல்லம் புதூர் பிரிவு சாலை அருகே சாலையில் ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. லாரி டிரைவர் தண்ணீர் பிடிப்பதற்காக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த கார் முன்னால் நின்ற லாரி மீது படுவேகமாக மோதியது. இதில் காரின் பெரும்பாலான முன்பகுதி லாரியின் அடியில் சிக்கி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த விஜய், ஜெயராமன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகள் வல்லம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் காரில் சிக்கி இந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .இதனால் தஞ்சை- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.